Monday, August 8, 2011

Krishna water


கிருஷ்ணா கால்வாயில் இருந்து பூண்டிக்கு வருகிறது தண்ணீர். அடுத்தபடம்: நீர் மட்டத்தை காட்டும் அளவுகோல்.




சென்னை மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க தமிழக, ஆந்திர மாநிலங்களுக்கு இடையே தெலுங்கு & கங்கை திட்ட ஒப்பந்தப்படி, ஆண்டுதோறும் ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு கிருஷ்ணா நீர் திறந்து விடப்படுகிறது.
15 டிஎம்சி தண்ணீரில் 3 டிஎம்சி சேதாரம் போக ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சியும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி தண்ணீரும் தமிழகத்துக்கு தரவேண்டும்.
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 21ம் தேதி கிருஷ்ணா தண்ணீர் திறந்து விடப்பட்டது. இது தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்ட்டை 23ம் தேதி மாலை வந்தடைந்தது.
பின்னர் அங்கிருந்து கிருஷ்ணா கால்வாய் வழியாக பூண்டி நீர்தேக்கத்துக்கு தண்ணீர் வந்தது. கண்டலேறு அணையில் இருந்து 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அது படிப்படியாக 2,000 கன அடியாக உயர்த்தப்பட்டது.நேற்று காலை நிலவரப்படி ஜீரோ பாயின்ட்டுக்கு 862 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதுவரை தமிழகத்துக்கு 2.60 டிஎம்சி தண்ணீர் கிடைத்துள்ளது. கிருஷ்ணா நீர் வருகையால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இங்குள்ள உபரி நீர் இணைப்பு, பேபி கால்வாய் வழியாக புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்பப்படுகிறது. 

Periyapalayam Bhavani Amman Temple


பவானியம்மன் கோயிலில் 4வது வார ஆடி திருவிழா :

பெரியபாளையம் பவானியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா நடந்து வருகிறது. 4வது வாரமான நேற்று ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நேற்று முன்தினம் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்தும், வேப்பிலை ஆடை கட்டி அங்கப்பிரதட்சணம் செய்தும் பெண்கள் வழிபட்டனர். ஆடு, கோழி பலியிட்டு நேர்த்தி செலுத்தினர்.
நேற்று காலை பவானியம்மனுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது. மாலையில், சிம்ம வாகனத்தில் மகிஷா சூரமர்த்தினியாக அம்மன் வீதியுலா நடந்தது. விழாவில் 50,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Thursday, August 4, 2011

நாக வாகனத்தில் அம்மன் வீதியுலா

 
 பெரியபாளையம் பவானியம்மன் கோயிலில் ஆடி திருவிழா கடந்த 17ம் தேதி தொடங்கியது. ஆடி மாதம் முதல் வாரத்தில் தொடங்கி வாரம் தோறும் சனி, ஞாயிற்றுக் கிழமை என 10 வாரம் தொடர்ந்து விழா நடைபெறும்.
உள்ளூர், வெளியூர், பிற மாநில பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள். கோயிலில் தங்கியிருந்து ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர். 
 3வது வாரமான நேற்று காலை, அம்மனுக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட அபிஷேகம், விசேஷ அலங்காரத்துடன் பூஜை நடந்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். 
 
 கோயிலுக்கு வந்த பெண் பக்தர்கள், சிறுவர், சிறுமிகள் வேப்பிலை ஆடை அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மனுக்கு கூழ் ஊற்றி, எலுமிச்சை மாலை சாற்றி, கோயில் பிரகாரத்தை சுற்றிவந்து விளக்கு ஏற்றி வழிபட்டனர். மாலையில், நாக வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது.

Sunday, July 24, 2011

குதிரை வாகனத்தில் பவானியம்மன் திருவீதியுலா


ஊத்துக்கோட்டை, ஜூலை 25:


ஆடி மாதம் முதல் வாரத்தில் தொடங்கி வாரம் தோறும் சனி, ஞாயிற்றுக் கிழமை என 10 வாரங்கள் தொடர்ந்து விழா நடைபெறும். உள்ளூர் மற்றும் வெளியூர், பிற மாநில பக்தர்கள் பெரும் திரளாக கலந்து கொள்வார்கள். கோயிலில் தங்கியிருந்து ஆடு, கோழிகளை பலியிட்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

பவானியம்மன் கோயிலில் ஆடி திருவிழாவின் 2 வாரமான நேற்று காலை அம்மனுக்கு மலர், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம், விசேஷ அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. மாலை குதிரை வாகனத்தில் ராஜபார்ட் அலங்காரத்தில் பவானியம்மன் திருவீதியுலா வந்தார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஊத்துக்கோட்டை, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெண்கள் கூழ் ஊற்றினர். விழாவையொட்டி, ஆந்திராவில் இருந்து வந்த வாகனங்கள் ஊத்துக்கோட்டை மற்றும் ஜனப்பன்சத்திரம் வழியாக திருப்பி விடப்பட்டன.

Friday, July 22, 2011

பவானியம்மன் கோயில் ஆடித்திருவிழா


பெரியபாளையத்தில் புகழ்பெற்ற பவானியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆடித் திருவிழா 10 வாரங்கள் நடைபெறும். திருவிழாவுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு குறித்து ஊத்துக்கோட்டை டிஎஸ்பி பாரதி கூறியதாவது:
ஆடித் திருவிழாவையொட்டி, பெரியபாளைம் பவானியம்மன் கோயிலுக்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கார், பஸ், வேன், டிராக்டர், மாட்டுவண்டி உள்ளிட்ட வாகனங்களில் ஏராளமானோர் வருவார்கள். சனி, ஞாயிற்று கிழமைகளில் தங்கியிருந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
10 வாரங்களுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகவும், பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் 2 டிஎஸ்பி தலைமையில், 5 இன்ஸ்பெக்டர், 16 சப் இன்ஸ்பெக்டர், 8 பெண் சப் இன்ஸ்பெக்டர் உட்பட 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் கனரக வாகனங்கள் ஜனப்பன்சத்திரம் கூட்டு சாலையிலும், ஆந்திராவில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள் ஊத்துக்கோட்டையிலும் திருப்பி விடப்படும்.