Monday, August 8, 2011

Krishna water


கிருஷ்ணா கால்வாயில் இருந்து பூண்டிக்கு வருகிறது தண்ணீர். அடுத்தபடம்: நீர் மட்டத்தை காட்டும் அளவுகோல்.




சென்னை மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க தமிழக, ஆந்திர மாநிலங்களுக்கு இடையே தெலுங்கு & கங்கை திட்ட ஒப்பந்தப்படி, ஆண்டுதோறும் ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு கிருஷ்ணா நீர் திறந்து விடப்படுகிறது.
15 டிஎம்சி தண்ணீரில் 3 டிஎம்சி சேதாரம் போக ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சியும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி தண்ணீரும் தமிழகத்துக்கு தரவேண்டும்.
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 21ம் தேதி கிருஷ்ணா தண்ணீர் திறந்து விடப்பட்டது. இது தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்ட்டை 23ம் தேதி மாலை வந்தடைந்தது.
பின்னர் அங்கிருந்து கிருஷ்ணா கால்வாய் வழியாக பூண்டி நீர்தேக்கத்துக்கு தண்ணீர் வந்தது. கண்டலேறு அணையில் இருந்து 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அது படிப்படியாக 2,000 கன அடியாக உயர்த்தப்பட்டது.நேற்று காலை நிலவரப்படி ஜீரோ பாயின்ட்டுக்கு 862 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதுவரை தமிழகத்துக்கு 2.60 டிஎம்சி தண்ணீர் கிடைத்துள்ளது. கிருஷ்ணா நீர் வருகையால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இங்குள்ள உபரி நீர் இணைப்பு, பேபி கால்வாய் வழியாக புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்பப்படுகிறது. 

Periyapalayam Bhavani Amman Temple


பவானியம்மன் கோயிலில் 4வது வார ஆடி திருவிழா :

பெரியபாளையம் பவானியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா நடந்து வருகிறது. 4வது வாரமான நேற்று ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நேற்று முன்தினம் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்தும், வேப்பிலை ஆடை கட்டி அங்கப்பிரதட்சணம் செய்தும் பெண்கள் வழிபட்டனர். ஆடு, கோழி பலியிட்டு நேர்த்தி செலுத்தினர்.
நேற்று காலை பவானியம்மனுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது. மாலையில், சிம்ம வாகனத்தில் மகிஷா சூரமர்த்தினியாக அம்மன் வீதியுலா நடந்தது. விழாவில் 50,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.